புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

 

ஒசூர், ஆக.19: ஓசூர் மாநகராட்சியின் அந்திவாடி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சில பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை அறிந்து அதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.

இதில், அவர்களது பெற்றோர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் வெளி மாநிலங்களில் இருந்து ஓசூர் பகுதிக்கு பணி நிமித்தமாக புலம்பெயர்ந்து வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்க ஆணையாளர் உத்தரவிட்டார். இதன்பேரில், 23 குழந்தைகள் மீட்கப்பட்டு அந்திவாடி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் டாக்டர் பிரபாகரன், செயற்பொறியாளர் ராஜாராம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: