உடன்குடி, ஆக. 13: குலசேகரன்பட்டினம் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற கார் டிரைவரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆக.11ம் தேதி இரவு 8.30 மணியளவில் கல்லாமொழி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது கருப்பு நிற கார், பெட்ரோல் நிரப்ப பங்கிற்கு வந்துள்ளது. இந்த காரை ஓட்டி வந்த 40 வயது மதிக்கத்தக்கவர், முத்துக்குமாரிடம் 3500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார். இதையடுத்து காருக்கு பெட்ரோல் நிரப்பிய நிலையில், பணம் கொடுக்காமல் டிரைவர், காரை வேகமாக ஓட்டிச் சென்று தப்பினார். இவை அனைத்தும் பெட்ரோல் பங்கில் பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து முத்துக்குமார் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் டிரைவரை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே நபர், தூத்துக்குடி பகுதியிலும் பெட்ரோல் போட்டு விட்டு பங்கில் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post குலசேகரன்பட்டினம் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் சென்ற டிரைவர் appeared first on Dinakaran.