குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்குழு கூட்டமைப்பின் தலைவர் தேவன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கிராம அளவிலான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுவரை குழந்தைகள் உரிமைக்காக ஊராட்சி நிர்வாகம் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களால் செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குழந்தை திருமணத்தை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்து பேசப்பட்டது.

மேலும், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிலை தவிர்த்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தீய பழக்கங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், மொபைல் போனில் சமூக வலை தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவில், அரசு உருவாக்கியுள்ள கிராம அளவிலான குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவை வலுபடுத்துதல், பாலர் பஞ்சாயத்து கிராம அளவில் அழைத்து குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தல், திருப்போரூர் அருகே பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்து கல்வி அளித்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தண்டலம் ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுக்களின் நிர்வாகிகள், மகளிர் குழுக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமசந்திரன் நன்றி கூறினார்.

The post குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: