பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

விருதுநகர், ஆக.5: பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும்போது கண்காணிக்க வேண்டியவை குறித்து நுகர்வோர் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். இதில், பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, கடையில் உள்ள தராசு அரசால் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மின்னணு தராசு என்றால் எடை காட்டும் இன்டிகேட்டர் 0வில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேஜை தராசு, விட்டத்தராசு என்றால் 2 தட்டுகளும் சமமாக உள்ளதா என்பதையும், தராசுகளுக்கு கீழே ரப்பர் பேண்ட் அல்லது கயிறு வைத்து கட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இரும்பு எடைகற்களின் அடிப்பாகம் தேய்க்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். துணிக்கடைகளில் பயன்படுத்தும் மீட்டர் ஸ்கேலின் இருப்பக்க முனைகளிலும் அம்புக்குறிகள் முழுமையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும்போது தயாரித்தவர், பேக்கிங் செய்தவர், இறக்குமதியாளர் பெயர் மற்றும் முழு முகவரி உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விலையை (வரிகள் உட்பட) கவனித்து வாங்க வேண்டும். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நிகர எடையை விட குறைவாக இருந்தாலோ, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தாலோ புகார் செய்யலாம் என நுகர்வோர் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை appeared first on Dinakaran.

Related Stories: