கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் ₹78 லட்சம் மதிப்பில் காவல்நிலைய கட்டிடம்: தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கறம்பக்குடி, ஆக.2: கறம்பக்குடி அருகே ₹ 78,18,000 மதிப்பில் கட்டப்பட்ட ரெகுநாதபுரம் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் குத்து விளக்கு ஏற்றி மேற்பார்வையிட்டார். அரசுக்கு அனைத்து தரப்பு மக்களும் நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் காவல் நிலையம் இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யை ஏற்று 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெகுநாதபுரம் காவல்நிலையம் தொடங்க பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி இசேவை மையத்தில் செயல்பட்டு வந்தது.

இதனால் காவல்நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏற்று காவல் நிலையம் கட்டிடம் புதிதாக கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 1 வருடத்திற்கு மேலாக பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அதையடுத்து ரூபாய் 78,18,000 மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ரெகுநாதபுரம் காவல் நிலையத்தை நேற்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ரெகுநாதபுரம் காவல் நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கும்போது காவல் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு காவல் நிலையத்தில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து அனைத்து அறைகளையும் மேற்பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, கறம்பக்குடி தாசில்தார் ஜபருல்லா, கறம்பக்குடி அட்மா கமிட்டி தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான முத்து கிருஷ்ணன், அரசு ஒப்பந்தக்காரர் பரிமளம், ஆலங்குடி டிஎஸ்பி பவுல்ராஜ், கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரவி, அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் ரெகுநாதபுரம் எஸ்ஐ பாண்டியராஜா மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ₹78,18,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரெகுநாதபுரம் காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

The post கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் ₹78 லட்சம் மதிப்பில் காவல்நிலைய கட்டிடம்: தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: