அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குடிநீர் ஊரணியை சுத்தம் செய்யும் பணி

திருமயம், ஆக.1: அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குடிநீர் ஊரணி சுத்தம் செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளில் சேகரித்து குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக காலப்போக்கில் அரிமளம், திருமயம் பகுதி மக்கள் ஊரணி, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள திறந்தவெளி நீரை குடிநீருக்காக பயன்படுத்தவதை தவிர்த்து வருகின்றனர். இருந்த போதிலும் ஒரு சில கிராமத்தினர் நீர்நிலைகளை பாதுகாத்து அதனை இன்றளவும் குடிநீருக்காக பயன்படுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இது போன்ற நீர் நிலைகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதை கைவிட்ட மக்கள் தற்போது தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தில் அப்பகுதி மக்கள் இன்றளவும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் நல்ல பிள்ளை பெத்தான் ஊரணி என்ற வினோத பேருடன் இருந்து வருகிறது. இந்த ஊரணிக்கான நீரானது செங்கீரை தைலம் மர வனப்பகுதிக்குள் பெய்யும் மழை நீர் கால்வாய் மூலம் ஊரணியில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரணி தூர்வாரி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊரணியை தூர்வார கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் செங்கீரை கிராம மக்களுடன் ஊராட்சி நிர்வாகமும் சேர்ந்து குடிநீர் ஊரணியை சுத்தம் செய்ய முன் வந்தது. இதன் அடிப்படையில் முதலில் ஊரணியில் இருந்த நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது.

அப்போது ஊரணிக்குள் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு சேரும் சகதியும் தேங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பொக்லைன், டிராக்டர் உதவியுடன் பல நாட்கள் போராடி சேரை வாரி வெளியில் கொண்டு கொட்டினர். இதனைத் தொடர்ந்து ஊரணியின் மையப் பகுதியில் இருந்த கிணறும் தூர்வாரப்பட்டது. அதேசமயம் ஊரணிக்கு கூடுதலாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சேதம் அடைந்த ஊரணி சுற்றுச் சுவர்கள் புனரமைக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில் காலம் மாறினாலும் செங்கீரை சுற்றுவட்டார கிராம மக்கள் பல தலைமுறைகளாக குடிநீருக்காக இன்றளவும் ஊரணி நீரை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து ஊரணி தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post அரிமளம் அருகே 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குடிநீர் ஊரணியை சுத்தம் செய்யும் பணி appeared first on Dinakaran.

Related Stories: