சர்க்கரையின் அளவு 50க்கு கீழே குறைவதால் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து: பேரணியில் மனைவி ஆவேசம்

புதுடெல்லி: சர்க்கரையின் அளவு 50க்கு கீழே குறைவதால் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறினார். ஆம்ஆத்மி தலைவரும், ெடல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ‘இந்தியா’ கூட்டணி பேரணியில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘எனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

மக்களிடையே வெறுப்பை பரப்புவதும், டெல்லி மக்களின் வேலையை நிறுத்துவதும் பாஜகவின் அரசியல். கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏன் கைது செய்தது? அதன் பின்னணியில் சதி உள்ளது. கீழ் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஒன்றிய அரசின் நடவடிக்கையால், அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் வழக்கு பதிந்தது. அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கிடைத்தது. ஆனால் சிபிஐ கைது செய்ததால் அவரால் ஜாமீனில் வரமுடியவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இன்சுலின் கொடுக்க வேண்டுமானால் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது. பொதுவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 50க்கு கீழே குறைந்தால் பாதிக்கப்பட்டவர் நடுங்குவார்.

கெஜ்ரிவால் வீட்டில் இருந்தபோது, ​​ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு நடுங்கியுள்ளார். அவரை நிலைப்படுத்த ஏதாவது இனிப்பு கொடுப்போம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் அவருக்கு சிறையில் சர்க்கரையின் அளவு பலமுறை குறைந்துள்ளது. எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருந்ததற்கு, கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. முதல்வராக இருக்கும் அவர் வேண்டுமென்றே உணவைக் குறைத்து உண்கிறார். இதுகுறித்தும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதினேன்’ என்றார்.

The post சர்க்கரையின் அளவு 50க்கு கீழே குறைவதால் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து: பேரணியில் மனைவி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: