தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்காவாக இருக்கிறது : சட்டம் – ஒழுங்கு குறித்து பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்காவாக இருக்கிறது என  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் . சட்டம் – ஒழுங்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்துள்ளார். அதில், அண்மையில் நடந்த கொலைகள் முன்விரோதத்தால் நடைபெற்றவை. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் நிகழ்ந்த படுகொலையையும் தமிழ்நாட்டில் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்காவாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?. புதுப்புது குற்றவாளிகள் உருவாகிறார்கள் ; என்ன செய்வது?. எதிர்க்கட்சித் தலைவர் தமிழகம் கொலை மாநிலமாக மாறி வருவதாக குற்றம்சாட்டுகிறார். தமிழகம் கலை அறிவியல் மாநிலமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறியவர் ஈபிஎஸ்.

பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள்தான் அதிகரித்து இருக்கிறது. கொலை சம்பவங்களுக்கு அரசாங்கத்தை குறை கூற கூடாது. தொடர் தேர்தல் தோல்வியின் விரக்தியால் எடப்பாடி பழனிசாமி இது போன்று பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையவை. திமுக ஆட்சியில் நடைபெறும் சம்பவங்கள் அரசியல் குற்றச் சம்பவங்கள் அல்ல. வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரவுடிகள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் தொகை பெருக்கம் வன்முறை சம்பவங்களுக்கு ஒரு காரணி என்றும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்காவாக இருக்கிறது : சட்டம் – ஒழுங்கு குறித்து பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.

Related Stories: