இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்பு கலந்தாய்வு : அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் நிரம்பின

சென்னை: இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசு கல்லூரிகளில் இருந்த 160 இடங்களும் நிரம்பின. சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 இடங்கள் உள்ளன. 16 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1,500 இடங்கள் உள்ளன. யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில், 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நடந்தது. இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,320 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,243 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,187 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,173 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. இதையடுத்து, தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டு, சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் நேற்று மட்டும் மொத்தம் 328 இடங்கள் நிரம்பின. இவற்றில் 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 160 இடங்களும், சிறப்பு பிரிவில் 14 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 12 இடங்கள் நிரம்பின. தொடர்ந்து, இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வும், 26, 27ம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

The post இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்பு கலந்தாய்வு : அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: