அரசு பஸ்களில் முன்பதிவுகளை எளிதாக்க புதிய இணையதளம், செயலி தொடக்கம்


சென்னை: தமிழக பொது போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்த திட்டம், எஸ்இடிசி (அரசு விரைவு போக்குவரத்து கழகம்) மற்றும் டிஎன்எஸ்டிசி (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயணர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது டிஎன்எஸ்டிசி கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கம் செய்தும் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 3 ஓட்டுநர்கள், 11 நடத்துநர்கள் உள்பட 14 பேருக்கும், 3 இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநருக்கான பணி ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில், போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக சென்னை மேலாண் இயக்குநர் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அரசு பஸ்களில் முன்பதிவுகளை எளிதாக்க புதிய இணையதளம், செயலி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: