செய்வினை செய்து விடுவேன் என டிவி நடிகருக்கு மிரட்டல்: பெண்ணுக்கு வலை

துரைப்பாக்கம்: திருவான்மியூர், கலாஷேத்ரா காலனி பார்வதி தெருவில் வசிப்பவர் சதீஷ்குமார் (45). தனியார் தொலைக்காட்சி சீரியல் நடிகரான இவர், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2023ம் ஆண்டு பெசன்ட் நகரில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருந்தேன். அப்போது, 40வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து, என்னிடம் போட்டோ எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு, தான் மறுப்பு தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன். சில நாள் கழித்து அப்பெண் செல்போன் மூலம் என்னை தொடர்புகொண்டு அந்த பெண் பேசி தொந்தரவு செய்ததால், அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பெண், எனது வீட்டிற்கு வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வீட்டின் வாசலில் வைத்துவிட்டு, செய்வினை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்வினை செய்து விடுவேன் என டிவி நடிகருக்கு மிரட்டல்: பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: