கஞ்சா போதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்கள் கைது

 

சின்னமனூர், ஜூலை 13: தேனி மாவட்டம், சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (55). ஓட்டல் உரிமையாளர். நேற்று முன் தினம் மாலை சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். பழையபாளையம் சாலையில் சென்றபோது எதிரில் வந்த டூவீலர், அவரது டூவீலர் மீது மோதுவதுபோல் வந்துள்ளது. இதனை செல்வம் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த டூவீலரில் வந்த 2 வாலிபர்கள், செல்வத்தை சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் செல்வம் பலத்த காயமடைந்தார்.

இதனை பார்த்த அப்பகுதிமக்கள், வாலிபர்கள் இருவரையும் பிடித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் கம்பம் அருகே கே.கே.பட்டி மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), நவீன் (22) என்பதும், இருவரும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

The post கஞ்சா போதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: