எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர் கைது காட்பாடியில் போலீசார் அதிரடி

வேலூர், ஜூலை 6: காட்பாடி வழியாக செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து கைப்பற்றினர். இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். ரயில்வே பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டு அறைக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்த குழுவினர் நேற்று காலை காட்பாடியில் வந்து நின்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ரயிலின் எஸ்2 பெட்டியில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில் 2 பொட்டலங்களாக கட்டப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கஞ்சாவுடன் கைது செய்த ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் குரிபந்தா தாலுகா கவுடகொத்தாவை சேர்ந்த எம்.அஜித் ஷபர்(27) என்பது தெரிய வந்தது. திருவனந்தபுரத்தில் பணிபுரியும் அஜித்ஷபர், சொந்த ஊருக்கு சென்று திரும்பும்போதெல்லாம் கஞ்சாவை கடத்தி வந்து கேரளாவில் விற்று வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல்நடவடிக்கைக்காக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரயில்வே போலீசார் கஞ்சாவுடன் ஒப்படைத்தனர். தொடர்ந்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அஜித்ஷபர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசா வாலிபர் கைது காட்பாடியில் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: