திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருமழிசை, திருத்தணி ஆகிய 3 இடங்களில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர், திருத்தணி கோட்டங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், திருமழிசை கோட்டத்தில் தரப்படும் மனுக்கள் செங்கல்பட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்படும்.

அதன் பிறகு அவர்கள் தரும் ஒப்புதலுக்குப் பிறகே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள பண்டக சாலையிலிருந்து மின் கம்பம், டிரான்ஸ்மார்மர், வயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அங்கு இருப்பு இருக்கும்போது மட்டுமே எடுத்து வர வேண்டிய கட்டாயமும் இருந்தது. இதனால் பொதுமக்களின் சிறு, சிறு கோரிக்கைகளுக்கும், உடனடி தீர்வு காண முடியாத நிலை இருந்தது. எனவே மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திருவள்ளூரில் செயல்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் விரைவில் செயல்படும் என தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளராக சென்னையில் பணியாற்றிய ஏ.சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முறைப்படி கையெழுத்திட்டு சேகர் பொறுப்பற்றார். இதுவரை திருவள்ளூர், திருத்தணி செயற்பொறியாளர் அலுவலகம் காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இருந்தது. திருமழிசை செயற்பொறியாளர் அலுவலகம் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்படும்போது இந்த 3 செயற்பொறியாளர் அலுவலகமும் இதன் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் மின்சார வாரியத்திற்கு விடுக்கும் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

The post திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: