ஆதிதிராவிடர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஜூலை 3: ஆதிதிராவிடர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஒரு வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு ரூ.18 ஆயிரம் மாத தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது 2024-25 கல்யாண்டில் எது முன்னரோ அதுவரை பணி செய்யலாம்.

பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான அரசு விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர் அல்லது இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்காலிக பணிக்கு தகுதியான நபர்கள் ஜூலை 5க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post ஆதிதிராவிடர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: