சாலையை மறைக்கும் முள் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருவாடானை, ஜூலை 3: தேவகோட்டையில் இருந்து மங்களக்குடி வழியாக எஸ்.பி.பட்டினம் வரை செல்லும் நெடுஞ்சாலையில் சீமை கருவேல முள்செடிகள் சாலையை மறைத்துள்ளதால் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள மங்களக்குடி ஊர் வழியாக தேவகோட்டையில் இருந்து எஸ்பி.பட்டினம் வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ஓரியூர் ஆண்டாவூரணி மங்கலகுடி, என்.மங்கலம் என 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் குருந்தங்குடி பஸ் ஸ்டாப்பில் இருந்து சாலையின் இரண்டு பக்கமும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு சீமை கருவேலம் முள் செடிகள் சாலையை மறைத்து படர்ந்து கிடக்கிறது. இதனால் எதிரே பஸ், லாரி போன்ற வாகனங்கள் வரும்போது சாலையின் ஓரம் விலகிச் செல்ல வேண்டி உள்ளது. அப்போது சீமை கருவேல முள் செடிகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையை மறைக்கும் முள் செடிகளை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: