புதுமாப்பிள்ளையை வெட்டிய 3 பேர் குண்டாசில் கைது செங்கத்தில் காதல் திருமணம் செய்த

செங்கம், ஜூலை 5: செங்கத்தில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை சரமாரி வெட்டிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். செங்கம் நகரில் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை விஜய்(25) என்பவர், கடந்த மாதம் 15ம் தேதி பெட்ரோல் பங்கில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அன்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அங்கு வந்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன்(48), அவரது மகன் சிவா என்பவர்கள் உட்பட 5 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.

அதனை தடுக்க வந்த பங்க் ஊழியர் அரவிந்த் என்பவருக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், இவர்கள் இருவரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் போலீசார் வழக்கு பதிந்து டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் தனிப்படை போலீசார், முன்விரோதம் காரணமாக புதுமாப்பிள்ளையை வெட்டிய ஜானகிராமன், சிவா, மதிவாணன்(38), அறிவு(25) உட்பட 5 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜானகிராமன், மதிவாணன், அறிவு ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார்.

The post புதுமாப்பிள்ளையை வெட்டிய 3 பேர் குண்டாசில் கைது செங்கத்தில் காதல் திருமணம் செய்த appeared first on Dinakaran.

Related Stories: