கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ரூ.5.25 கோடி மதிப்பீட்டில், ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் விடுதி கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று ஆய்வு செய்தார்.  செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த குமிழி ஊராட்சியில், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், இடையர்பாளையம், அஸ்தினாபுரம், ஒத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 136 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் தங்கும் வசதி, உணவு, இருப்பிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, அவருடன் ஆதிதிராவிடர் நல அலுவலர் வெற்றிகுமார், தாட்கோ பொது மேலாளர் தபசுகனி, வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: