ஸ்நேஹ் ராணா 8 விக்கெட் வீழ்த்தினார்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்ரிக்கா

சென்னை: இந்திய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு சுருண்ட தென் ஆப்ரிக்கா ஃபாலோ ஆன் பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷபாலி 205, மந்தனா 149, ஜெமிமா 55, கேப்டன் ஹர்மன்பிரீத் 69, ரிச்சா 86 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது.

மரிஸன்னே காப் 69 ரன், நடின் டி கிளெர்க் 27 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். காப் 74 ரன் (141 பந்து, 8 பவுண்டரி), டி கிளெர்க் 39 ரன் எடுத்து வெளியேற, சக வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (84.3 ஓவர்). டுமி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா 17 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 25.3 ஓவரில் 4 மெய்டன் உள்பட 77 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தீப்தி ஷர்மா 2 விக்கெட் எடுத்தார். 337 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. போஷ் 9 ரன்னில் வெளியேற, கேப்டன் லாரா வுல்வார்ட் – சுனே லுவஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 190 ரன் சேர்த்தது. லுவஸ் 109 ரன் (203 பந்து, 18 பவுண்டரி) விளாசி ஹர்மன்பிரீத் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

3ம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்துள்ளது (85 ஓவர்). வுல்வார்ட் 93 ரன், மரிஸன்னே காப் 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 105 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஸ்நேஹ் ராணா 8 விக்கெட் வீழ்த்தினார்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்ரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: