வீரராகவர் கோயிலில் அமாவாசையன்று நிறைய மக்கள் கூடுவதால் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டி தர வேண்டும்: பேரவையில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சுகாதாரத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, தொழில்துறை மானியக்கோரிக்கையின் போது திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.இராஜேந்திரன்(திமுக) பேசியதாவது: தமிழ்நாட்டில் இன்றைக்கு கருவுற்றதில் இருந்தே மக்கள் நல்வாழ்வுத் துறையின் வேலை தொடங்கி விடுகிறது. கருவுறும் போதே முதலில் பிரைமரி ஹெல்த் சென்டருக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஆறு மாதம் ஊட்டச்சத்து, ஆறு மாதம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் மருத்துவ உதவித் திட்டத்தின்கீழ் மருத்துவப் பணியைத் தொடங்கிவிடுகிறது.

கலைஞர் ஆட்சியில், 1999ல் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. இது, கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் சரி என்றைக்கும் மக்கள் நல்வாழ்விற்காக, மக்களுக்காக, மக்களுக்கான ஆட்சியாக இன்றைக்கும் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நம் குடும்பத் தலைவிகளெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதால், ‘நீங்கள் நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று பாடுகிறார்கள்.

என்னுடைய தொகுதி கோரிக்கையான முக்கியமான கோரிக்கைகள், வீரராகவர் கோயிலில் அமாவாசை அன்று நிறைய மக்கள் கூடுகிறார்கள் என்பது நம்முடைய இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அங்கு திருமண மண்டபமும், தங்கும் விடுதியும் கட்டித் தர வேண்டும். ஏற்கெனவே, திருவாலங்காடு, மாந்தீஸ்வரர் கோயிலுக்கு மண்டபம் கேட்கப்பட்டிருக்கிறது. அதையும் அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருவள்ளுர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. பைபாஸ் சாலை பணிகள் தொடங்கப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதற்கு இந்த ஆண்டிலேயே நிதி கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட வேண்டும். அதற்கு நம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு செவிசாய்க்க வேண்டும். திருவள்ளுர் நகரத்திற்கு ரூ.32 கோடியில் பஸ் நிலையம் கொடுத்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.

நகராட்சிப் பள்ளிக்கு ரூ.5 கோடி தருவதாக கூறியிருக்கிறார். மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியதாக இருக்கிறது. அதில் Cath Lab வேண்டும் என்று வாக்கிங் செல்லும் போதெல்லாம் கேட்டுள்ளேன். மக்கள் நல்வாழ்வுத் துறை அதற்கு செவி சாய்த்து Cath Lab ஏற்படுத்தினால், சென்னை ஜிஎச்க்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். அங்கேயே அறுவை சிகிச்சை நடக்கும். மக்கள் அலையவேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post வீரராகவர் கோயிலில் அமாவாசையன்று நிறைய மக்கள் கூடுவதால் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டி தர வேண்டும்: பேரவையில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: