மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், வீராகதிரவன், மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், ஜோதி, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசு தரப்பு மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 12ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் மலை, திரி, எண்ணெய் எங்கும் போய் விடாது.
நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்காகவே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோயில்களில் இதைச் செய்யக்கூடாது. இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால் நீதிமன்றத்தை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டம், ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன் பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும். எனவே, கால அவகாசம் வேண்டும். இது தொடர்பாக விரிவான பல உத்தரவுகள் உள்ளன’’ என கூறப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘நீதிமன்றத்தின் இரு உத்தரவுகளையும் அரசுத் தரப்பில் நிறைவேற்றவில்லை. தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு எனக் கூறுவதை ஏற்க இயலாது’’ என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், ‘‘மனுதாரர் தரப்பு பொறுப்பற்ற முறையில் வாதத்தை வைக்கிறது. மதுரை அமர்வில் இந்த வழக்கு வரும் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘இந்த வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல. சொத்து உரிமை தொடர்பானதும் கூட. இந்த வழக்கை உங்கள் கோரிக்கையை ஏற்று ஒத்தி வைக்கிறேன். ஆனால் அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குறைபாடுள்ள மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இதுவரை தலையிடவில்லை. உயர்நீதிமன்ற அமர்விலும் மேல்முறையீட்டு மனு மீது எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். நீதிமன்ற உத்தரவை மீறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். இதுபோன்று கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்ட வழக்குகளிலும் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் உயரதிகாரிகளை அழைத்து இந்த நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு ஏதேனும் சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல்கள் வழங்க தயாராக உள்ளார்களா என்பதை தெரிய விரும்புகிறேன். நான் இங்கு கைகளை விரித்து, ‘ஓ தந்தையே, அவர்களை மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது’ என்று கூற வரவில்லை. எனவே, தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் வரும் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் தரப்பில் பதிலளிக்க வேண்டும். விசாரணை டிச. 17க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
