இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (25.06.2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 25.06.2024 அன்று, IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: