பர்மிட்டை புதுப்பிக்க அரசு மறுப்பு மேலும் ஒரு பிரெஞ்சு நிருபர் இந்தியாவை விட்டு வெளியேறினார்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் விதித்த தடையால் மேலும் ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் இந்தியாவை விட்டு வெளியேறினார். ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல்,ரேடியோ பிரான்ஸ் ,லிபரேஷன், சுவிட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் ரேடியோ ஆகியவற்றின் தெற்காசிய நிருபராக டெல்லியில் பணியாற்றியவர் செபஸ்டின் பார்சிஸ். இந்தியாவில் பல ஆண்டுகள் நிருபராக பணியாற்றிய செபஸ்டினுக்கு பணிபுரிவதற்கான பர்மிட்டை புதுப்பிப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் மறுத்து விட்டது. இதனால் கடந்த 17ம் தேதி செபஸ்டின் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து செபஸ்டின் டிவிட்டரில் பதிவிடுகையில், கடந்த 2011 முதல் இந்தியாவில் பணிபுரிந்து வந்தேன். விசா மற்றும் இதர ஆவணங்களை வைத்துள்ளேன். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி இல்லாமல் பணிபுரிந்தது இல்லை. எல்லையோர பகுதிகளில் பணியாற்றுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பல முறை அனுமதி வழங்கியிருக்கிறது.13 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றியுள்ளேன். எனது பர்மிட்டை புதுப்பித்து தருவதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த பிரெஞ்சு பெண் பத்திரிகையாளர் வானேசா டக்னக் என்பவருக்கு பத்திரிகையாளராக பணிபுரியும் உரிமை மறுக்கப்பட்டதையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பர்மிட்டை புதுப்பிக்க அரசு மறுப்பு மேலும் ஒரு பிரெஞ்சு நிருபர் இந்தியாவை விட்டு வெளியேறினார் appeared first on Dinakaran.

Related Stories: