கோவில்பட்டி ஜமாபந்தியில் பட்டா வழங்க தமாகா மனு

கோவில்பட்டி, ஜூன் 20: கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. ஜமாபந்தி அலுவலரும், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியருமான ஹபீபு ரஹ்மானிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராஜகோபால், நகர பொருளாளர் செண்பகராஜ், மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24க்குட்பட்ட கடலையூர் சாலை, வள்ளுவர் நகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் 40 ஆண்டுகளாக நகராட்சிக்கு முறையாக தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது தாசில்தார்கள் சரவண பெருமாள், மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கோவில்பட்டி ஜமாபந்தியில் பட்டா வழங்க தமாகா மனு appeared first on Dinakaran.

Related Stories: