குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல் பாலியல் தொந்தரவு செய்து மாணவிக்கு கொலை மிரட்டல்:  இளம்பெண் கைது  மனநல மருத்துவமனையில் சேர்ப்பு

அம்பத்தூர், ஜூன் 20: திருமங்கலத்தில் கல்லூரி மாணவி பாத்ரூமில் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி(20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பொறியியல் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கதறி அழுதபடி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமங்கலத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து பொறியியல் படித்து வந்தேன்.

எனது வீட்டின் எதிரே குடியிருக்கும் சாந்தி(26), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நட்பாக பழகினார். அப்போது, சாந்தி எனக்கு மது குடிக்க பழக்கப்படுத்தினார். சில நாட்களுக்கு பிறகு அவசர தேவை என்று கூறி என்னிடமிருந்து ₹1.25 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கச்செயின் ஆகியவற்றை வாங்கினார். இந்நிலையில், ஒருநாள் மது குடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டில் இருந்து வெளியேறினேன். பின்னர், அவருடன் பழகுவதை தவிர்த்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி என்னை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசி கொலை செய்துவிடுவேன், என்று மிரட்டுகிறார்.

நான் பாத்ரூமில் குளிப்பதை எனக்கு தெரியாமல் எடுத்த வீடியோவை காட்டி, தன்னுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடாவிட்டால் இன்டர்நெட்டிலும், எனது பெற்றோருக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வாடகை வீட்டை காலி செய்ய முயன்றேன். இதனை அறிந்த சாந்தி, என்னை விட்டு பிரிந்து சென்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறுகிறார். எனவே, பாலியல் தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுக்கும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிந்து சாந்தியை கைது செய்து விசாரித்தனர்.

அதில், சாந்தி தினமும் மது போதையில் சுமதியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சாந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சாந்தி தனக்கு மனநலம் பாதித்துள்ளதாகவும், மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதியின் முன் கதறி அழுதார். இதையடுத்து, சாந்தியை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க நீதிபதி அனுமதி அளித்தார். போலீசார் சாந்தியை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல் பாலியல் தொந்தரவு செய்து மாணவிக்கு கொலை மிரட்டல்:  இளம்பெண் கைது  மனநல மருத்துவமனையில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: