காதல் கணவனுடன் சென்னை சென்ற இளம்பெண் திடீர் சாவு

அரூர், ஜூன் 18: கம்பைநல்லூர் அருகே திருமணமாகி 10 ஆண்டுக்கு பின்பு குழந்தை பெற்றெடுத்த நிலையில், காதல் கணவனுடன் சென்னை சென்ற இளம்பெண் ஒரே நாளில் திடீரென உயிரிழந்த சம்பவம் கம்பைநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பைநல்லூர் அருகே ஜக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி(34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக ரமேஷ் பணிபுரிந்து வருகிறார். இதனால், கணவன் -மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாதது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த வருடம் ₹10 லட்சம் வரையிலும் செலவு செய்து IVF மூலம் தேவி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

ஆனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து குழந்தையை பார்க்கவில்லை. இதையடுத்து, இரு குடும்பத்தினரும் சமாதானம் பேசி கடந்த 15ம் தேதி கணவன்- மனைவியை சேர்த்து வைத்துள்ளனர். அன்றைய தினமே இருவரும் குழந்தையுடன் சென்னைக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் (16ம் தேதி) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரிக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவியின் தம்பி கொடுத்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காதல் கணவனுடன் சென்னை சென்ற இளம்பெண் திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: