வீட்டிற்குள் பதுங்கியபோது மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட ஆண் சிறுத்தை சிகூர் வனத்தில் விடுவிப்பு

 

கூடலூர்,மே 27: கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டிற்குள் பதுங்கிய ஆண் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நள்ளிரவில் வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுன்டி பகுதியில் வசிக்கும் சின்னம்மா என்பவரது தோட்டத்து வீட்டில் சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் புகுந்தது. அந்த சிறுத்தை வீட்டுக்குள் பதுங்கியிருப்பதை பார்த்த உடும்பன் என்ற தொழிலாளி கதவை வெளிபக்கமாக மூடி சிறுத்தை வீட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்தார்.

அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அன்று இரவு 8 மணி அளவில் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். பின்னர் வீட்டிற்குள் மயங்கி கிடந்த சிறுத்தையை வலை போட்டு பிடித்து கூண்டில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட சிறுத்தை 7 வயதுள்ள ஆண் சிறுத்தை என்பதும், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறது என்பது தெரிந்ததும், நள்ளிரவில் சீகூர் வனச்சரகம் காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது.

The post வீட்டிற்குள் பதுங்கியபோது மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட ஆண் சிறுத்தை சிகூர் வனத்தில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: