செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு அழகேசன் நகர் ஆர் வி தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் அறிவுருத்தலின் படி, செங்கல்பட்டு துணை கோட்ட காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் சதாசிவம், காவலர்கள் பிரேம்குமார், கண்ணதாசன், ஜெகன், வெங்கடேசன், கண்ணன், ரமேஷ் ஆகிய போலீசார் குறிப்பிட்ட வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வீட்டில் தங்கியிருந்த செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைகக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்குமார் தனது நண்பர் மூலமாக ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை கொள்முதல் செய்து சில்லறையாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மறைமலை நகர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: