தென்மேற்கு பருவமழை அந்தமானில் முன்னதாகவே தொடங்கியது: தமிழ்நாட்டுக்கு 22ம் தேதி வரை ரெட் அலர்ட்

சென்னை: வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாக அந்தமானில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் நேற்று முதல் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வரும் 22ம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், கேரளம், மாகே, கர்நாடக கடலோரப் பகுதிகளில் 22ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அங்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று (20ம் தேதி) தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்,

மாட்டங்களில் ஓரிரு இடங்களி்ல் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* வெயில் நிலவரம்…
தமிழ்நாட்டில் கோடை மழை தொடர்வதால், பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 98 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு குறைவாகவே வெயில் இருந்தது.

The post தென்மேற்கு பருவமழை அந்தமானில் முன்னதாகவே தொடங்கியது: தமிழ்நாட்டுக்கு 22ம் தேதி வரை ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: