கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(19), ஆகாஷ்(29), வெற்றிவேல்(27) மற்றும் சற்குணம்(28). இவர்கள் 5 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது திடீரென அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டனர். அடிதடி முற்றிய நிலையில், சரமாரியாக தாக்கிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகம் வழியாக ஓடியுள்ளனர். அப்போது வெற்றிவேல், சற்குணம் உட்பட 3 பேர் சேர்ந்து ரஞ்சித், ஆகாஷ் ஆகியோரை ஓட, ஓட விரட்டி சென்று கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக வெட்டியும் தாக்கியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய 3 பேரும் தப்பி சென்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் 20க்கும் மேற்பட்ட போலீசார் வந்து விசாரித்தனர். படுகாயம் அடைந்த இருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்துள்ள ஆகாஷ் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கோயம்பேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மேலும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், 3 மணி நேரத்தில் வெற்றிவேல், சற்குணம் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

‘’ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காதபடி போலீசார் பாதுகாக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: