புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் புதுச்சேரி மது, சாராயம் மற்றும் கள் விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவின்படி, கலால் டிஎஸ்பி வேல்முருகன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டபோது மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா (48) என்பவர் பாண்டிச்சேரி மது பாட்டில்களை விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்து 270 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

கடப்பாக்கம் குப்பம் பகுதியில் பாண்டிச்சேரி சாராயத்தை கடத்திவந்து விற்பனை செய்து வந்த சக்திவேல் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். தொழுப்பேடு, சூனாம்பேடு சாலையில் வாகன சோதனையில் நடத்தியபோது பைக்கில் வந்த சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தனிடம் இருந்து 144 பாண்டிச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக போலீசாரை பார்த்ததும் பைக்கை விட்டுவிட்டு தமிழ்வேந்தன் தப்பிவிட்டார். சிறுமையிலூர் கிராமத்தில் கள் விற்பனையில் ஈடுபட்ட பிரியா (32), தேன்பாக்கத்தில் கள் விற்பனையில் ஈடுபட்ட சாந்தி (50) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரையும் மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம், புழல் சிறைகளில் அடைத்தனர்.

The post புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: