திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு

திண்டுக்கல், மே 1: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்திலிருந்து 160 லட்சம் லிட்டர், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 70 லட்சம் லிட்டர் என மொத்தம் 230 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. மேலும் 413 மினி பவர் பம்புகளும் 143 கை அடி பம்புகள், 22 ஆழ்துளை கிணறு ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கடுமையான வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் குறித்து நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 33, 34 ஆகிய வார்டுகளில் ஆய்வு செய்தார். இதில் செயல்படாத பம்புகளை உடனடியாக 24 மணிநேரத்திற்குள் சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாநகர் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் சுவாமிநாதன், தியாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ஹனிபா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: