ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு எதிரான 2438 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி குற்றம்சாட்டுவது போல், தான் திருவள்ளூர் கிளை இயக்குனர் இல்லை என்றும் அலுவலக ஊழியராக மட்டுமே தான் பணியாற்றியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் தம்மிடம் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டு நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில், வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: