திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ராமநாதபுரம், ஏப்.24: திருஉத்தரகோசமங்கை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது.  ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற சிவன் தலமான மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான அம்பாள், சுவாமி திருக்கல்யாணம் நேற்று முன்தினம் மாலை நடந்து முடிந்தது. நேற்று காலையில் கள்ளழகர் குளத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து மாலையில் நான்கு ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார சுவாமிகள் சப்பர ஊர்வலத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் மங்களேஸ்வரி, மங்களநாதர் உற்சவமூர்த்திகள் கைலாய இசை வாத்தியங்களுடன் வீதிகளில் வலம் வந்தனர். பக்தர்கள் ஹரஹர சிவ,சிவ கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

வீதி உலாவின் போது கிராம பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வரவேற்று வழிபட்டனர். விவசாயம் செழிக்க வேண்டிய வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள் மீது கத்தரி, வாழைக்காய், பூசணி உள்ளிட்ட காய்கறிகள் வீசப்பட்டது. கடைசியாக தேரடி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன் செய்திருந்தனர். கீழக்கரை டி.எஸ்.பி சுதிர்லால் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: