சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வட பொன்பரப்பி கிராமம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிவாசல் தெரு, ராயசமுத்திரம், கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்கு ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியினருக்கு வரும் குடிநீர் கழிவுநீர் போல் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தண்ணீர் தெளிந்த நிலையில் வராமல் கழிவுநீராகவே வருகிறது. இதனை பயன்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, மாற்று ஏற்பாட்டின் மூலம் இப்பகுதியினருக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: