2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி இல்லாததால் ஓட்டு போட சைக்கிளில் சென்றேன்: மாணவரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதில்

சேலம்: வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்றதாக, சேலத்தில் கல்லூரி மாணவரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில், நடிகர் விஷால் நடித்த ரத்னம் திரைப்பட குழுவின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர்கள் விஷால் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே நடிகர் விஷால் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. நடிகர் சங்க தேர்தலின்போது நான் சேலத்தில் காலை வைத்தால், எனது காலை வெட்டுவேன் என்றார்கள். இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் நிச்சயம். இந்த ஆண்டு டிசம்பருக்குள் திருமணம் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் சாக்கடை போன்ற கெட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டு, நல்லவர்களை மட்டும்தான் உள்ளே வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது மாணவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விஷால்,‘நடிகருக்கு வெற்றி என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் உங்களை போலவே எனக்கும் விஜய் மீது இன்ஸ்பிரேசன்தான். ஓட்டு போட விஜய்யை பார்த்து சைக்கிளிலில் செல்லவில்லை. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிடம் மட்டும்தான் வண்டி உள்ளது. தற்போதுள்ள சாலையின் நிலை, போக்குவரத்து நெரிசலில் வண்டியில் போவது கஷ்டம் என்பதால், ஓட்டு போட சைக்கிளில் சென்றேன்,’’ என்றார்.

* நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்?
நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வருகிற 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன். கூட்டணி, சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும். என்னை அரசியலுக்கு வர விடாதீர்கள். அரசியல் கட்சியினர் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம். நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம். நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து, பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும்,’’ என்றார்.

The post 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி இல்லாததால் ஓட்டு போட சைக்கிளில் சென்றேன்: மாணவரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதில் appeared first on Dinakaran.

Related Stories: