இஸ்லாமியர் குறித்து வெறுப்பு பரப்புரை; பிரதமருக்கான கண்ணியத்தை மோடி சீர்குலைத்து விட்டார்: ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: பிரதமருக்கான கண்ணியத்தை மோடி சீர்குலைத்து விட்டார் என்று ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். முஸ்லிம்கள் பற்றி கேடு கெட்ட ஒரு மூன்றாம் தரப்பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை.

தனது 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜவின் பிரதமர் வேட்பாளர் மட்டரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும். இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மவுனமாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகி விடும் .

The post இஸ்லாமியர் குறித்து வெறுப்பு பரப்புரை; பிரதமருக்கான கண்ணியத்தை மோடி சீர்குலைத்து விட்டார்: ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: