தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி ஒரே நாளில் ரூ.298 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் கடந்த 20ம் தேதி ஒரே நாளில் ரூ.298.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 17 முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் மூடப்பட்டது. இதனால் 16ம் தேதி ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. மேலும் மூன்று நாள் விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 20ம் தேதி சனிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஞாயிறுக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இடையில் திறக்கப்பட்ட ஒரே நாளில் முடிந்தவரை சரக்குகளை வாங்க மதுபிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து சரக்குகளை வாங்கி சென்றனர். கடந்த 20ம் தேதி மட்டும் ரூ.298.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.66.38 கோடி, சென்னையில் ரூ.62.59 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரீமியம் வகை மதுபானங்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. 3 நாள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகம் கூட்டம் வரும் என எதிர்பார்த்தோம். இதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முன்கூட்டியே வழக்கத்தை விட அதிகமாக ஸ்டாக் வைத்து இருந்தோம் என தெரிவித்தனர்.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி ஒரே நாளில் ரூ.298 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: