பைனாகுலரில் தேடினாலும் தேமுதிகவ கண்டுபிடிக்க முடியல… பாஜ தீபத்தில் ஓபிஎஸ், டிடிவி சேர்ந்துட்டாங்க.. பாலகிருஷ்ணன் ‘கலாய்’

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கொண்டு வந்தபோது அதை நிறைவேற்றி விட்டு 2036ம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்த முடியும் என்று பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்தி வருவது தான் பாஜ அரசு. பாமக எந்த கொள்கையின் அடிப்படையில் பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மோடிக்கு காவடி தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைத்து கொண்டனர். தற்போது டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜவில் ஐக்கியமாகி விட்டனர். பாஜ தீபத்தில் அதிமுக கலக்க போகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாஜவுக்கு தான் போகும். இதுவரை பிரதமர் பற்றியோ, பாஜ பற்றியோ எந்த ஒரு விமர்சனத்தையும் எடப்பாடி பழனிசாமி வைக்காமல் இருக்கிறார்.

தங்கள் வீடுகளுக்கு ஈடி, ஐடி ரெய்டு வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். பைனாகுலர் வைத்து தேடினால் கூட தேமுதிக எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள ஒரு கட்சியை கூட்டணி உடன் வைத்துள்ளதாக அதிமுக கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் எந்த ஒரு சாதனையும் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து விலைவாசியை உயர்த்தி, மத கலவரத்தை தூண்டி விடுவது தான் பாஜவின் சாதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பைனாகுலரில் தேடினாலும் தேமுதிகவ கண்டுபிடிக்க முடியல… பாஜ தீபத்தில் ஓபிஎஸ், டிடிவி சேர்ந்துட்டாங்க.. பாலகிருஷ்ணன் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Related Stories: