விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம் கிடையாது தோற்கும் குதிரையான பாமக மீது பாஜ பணத்தை கட்டி உள்ளது: வாசுகி விளாசல்

அரூர்: தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் மணியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேசியதாவது: தர்மபுரி தொகுதியிலிருந்து அன்புமணி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்தும், தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. பாமக தோற்றுப் போகிற குதிரை. பாஜ அதன் மீது பணத்தை கட்டியுள்ளது.

வட மாவட்டத்தில் பாமகவை தவிர, மற்ற கூட்டணி கட்சிகளை தேட வேண்டியுள்ளது. பாஜ அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திர ஊழல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளனர். அன்புமணி வாக்கு சேகரித்த போது, பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சவுமியா பொங்கி பத்ரகாளியாக மாறி விடுவார் என தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்து, தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு அவர் எங்கும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள், பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் குரல் கொடுக்கவில்லை.

இந்தியாவில் மொத்த குற்றவாளிகளும் பாஜவில்தான் இருக்கின்றனர். பெண்களுக்கு ஒன்று என்றால் கொதிக்கும் பாமக, பாலியல் ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்திருப்பது விந்தையாக உள்ளது. அதிமுக பத்தாண்டுகள் பாஜவிடம் கூட்டணியில் இருந்து கொண்டு, பாஜ செய்த மக்கள் விரோத செயலுக்கு துணை போனது. தாமரை தமிழக மண்ணில் மலராது. விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம் கிடையாது தோற்கும் குதிரையான பாமக மீது பாஜ பணத்தை கட்டி உள்ளது: வாசுகி விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: