அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி

 

தஞ்சாவூர், ஏப்.10: அமெரிக்காவில் வேலை என்று சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா கோப்ராஜபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜய். (23). இவர் செல்போனுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் வெளிநாட்டு வேலை உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு ஒரு போனும் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் அமெரிக்க வேலைவாய்ப்பு பெற விசா, பயண கட்டணத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை என்ற ஆசை வார்த்தையை கூறி நம்ப வைத்த அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் ஆன்லைனில் பல தவணைகளில் அஜய் ரூ. 7 லட்சத்து 93 ஆயிரத்து 300 செலுத்தினார்.

பணம் செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையில் வேலை குறித்து எந்த தகவலும் வராததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜய் தஞ்சாவூர் சைபர்கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: