பிரசாரத்தை யாரும் கண்டுக்காததால் போக்குவரத்தை சரிசெய்வதுபோல் மன்சூர் அலிகான் அலப்பறை

வேலூர்: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக வேலூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வாக்கு சேகரித்து வருகிறார். மார்க்கெட்டில் மீன் விற்பது, லேகியம் விற்பது, காய்கறி வியாபாரிகளை சந்தித்து பேசுவது என தினமும் ஏதாவது ஒன்றை அட்ராசிட்டியாக செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வாக்கு சேகரிக்க குடியாத்தத்துக்கு 4 பேருடன் வந்தார். சிறிது நேரம் வாக்கு சேகரித்து பேசியபோது யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் திடீரென டிரைவரிடம் காரை அப்படியே நிறுத்து எனக்கூறினார். அதன்படி குடியாத்தம்-வேலூர் ரோட்டில் காரை டிரைவர் நிறுத்திவிட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நடிகர் மன்சூர்அலிகான் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போக்குவரத்தை சரிசெய்வது போல அலப்பறை செய்தார். தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது போல புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க தொடங்கினார்.

இதனால் திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் ‘இவரது பப்ளிசிட்டிக்காக இதுபோன்று அலப்பறை பண்ணிக்கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டு, சரிசெய்வது போல நடிப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என அனைவரும் திட்டித்தீர்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post பிரசாரத்தை யாரும் கண்டுக்காததால் போக்குவரத்தை சரிசெய்வதுபோல் மன்சூர் அலிகான் அலப்பறை appeared first on Dinakaran.

Related Stories: