கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி: ராகுல், கார்கே, சரத்பவார், அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார்கள். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்து ஆம்ஆத்மி தலைவர்கள் தினம், தினம் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆம்ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது. எனவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நாளை கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்தும் இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த கண்டன பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதை தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட கண்டன பேரணி பொதுக்கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல், தேசியவாதகாங்கிரஸ் சரத்சந்திரபவார் பிரிவு தலைவர் சரத்பவார், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி, பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேச உள்ளனர். 20 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்பதால் டெல்லி முழுவதும் இப்போதே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி: ராகுல், கார்கே, சரத்பவார், அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: