வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக நிர்வாகியான பிரபல ரவுடி 5 கிலோ கஞ்சாவுடன் கைது கூட்டாளிகளும் பிடிபட்டனர்

வேலூர், மார்ச் 28: வேலூர் சத்துவாச்சாரி அருகே பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கஞ்சா கடத்தியபோது போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். வேலூர் எஸ்பி மணிவண்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்பி தனிப்படை போலீசார் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் வேலூர் அடுத்த பெருமுகை அருகே நேற்று முன்தினம் இரவு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற காரை விரட்டிச் சென்று பிள்ளையார்குப்பம் அருகே மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது காரில் 5 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது.

அவற்றை காருடன் கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி பிரேம்(எ)வீச்சு தினேஷ்(34), கூட்டாளிகள் சத்துவாச்சாரியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(24), அஜித்(எ)சரண்ராஜ்(22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்க முயன்றது தெரிய வந்தது. பிடிப்பட்ட பிரபல ரவுடி வீச்சு தினேஷ், பாஜகவில் ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினரானவராம். அதோடு சிறிது காலம் அந்த கட்சியில் ஒரு அணியில் பொறுப்பும் வகித்தாராம். பின்னர் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டாராம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சாவுடன் பிடிப்பட்ட வீச்சு தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக நிர்வாகியான பிரபல ரவுடி 5 கிலோ கஞ்சாவுடன் கைது கூட்டாளிகளும் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: