புதுவையில் பரபரப்பு சிறுமியை கொன்று வீசிய வாய்க்காலில் வாலிபர் சடலம்

*கொலையா? போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். சிறுமியை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சோலைநகர் அம்பேத்கர் வீதி- கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டையில் சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை செய்த பிறகு அவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிந்து அப்பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. புதுவை முழுவதும் போராட்டகளமாக மாறியது. இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அப்பகுதியில் உள்ள அதே வாய்க்காலில் நேற்று காலை மற்றொரு சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற முத்தியால்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பிறகு இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், சோலை நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (35) என்பதும், இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. இவர் சென்டரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பார் என கூறப்படுகிறது.

கடந்த 23ம் தேதி ஞானபிரகாசம் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனிடையே ஞானப்பிரகாசம் சிறுமி இறந்து கிடந்த அதே வாய்க்காலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் இவரை யாராவது அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றனரா, குடிபோதையில் தவறி வாய்க்காலில் விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் பரபரப்பு சிறுமியை கொன்று வீசிய வாய்க்காலில் வாலிபர் சடலம் appeared first on Dinakaran.

Related Stories: