கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்

*வாலிபர் கொலையில் கைதான நண்பர்கள் வாக்குமூலம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே வாலிபர் கொலையில் கைதான நண்பர்கள் 2 பேரும், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள இலந்தையடிவிளை பகுதியை சேர்ந்தவர் தனேஷ் (28). கூலித் தொழிலாளி. கடந்த 24ம் தேதி இரவு தனது நண்பர்கள் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ரகுபாலன் (24), புவியூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (29) ஆகியோருடன் இணைந்து மது அருந்திக்கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில் ரகுபாலனுக்கும், தனேசுக்கும் இடையே திடீனெ தகராறு ஏற்பட்டது. இதில் ரகுபாலன், திவாகர் ஆகியோர் சேர்ந்து தனேசை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு விட்டு சென்று விட்டனர்.இதில் தனேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தனேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ரகு பாலன், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்கள் நேற்று முன் தினம் மாலை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரிடம் இவர்கள் கூறுகையில், தனேஷ் எங்களுடன் சேர்ந்து சமையல் வேலை, கட்டிட வேலைக்கு வருவார். நாங்கள் நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி மது அருந்துவோம். சம்பவத்தன்றும் வடுக்கன்பற்று நான்கு வழிச்சாலையில் வைத்து மது அருந்தினோம்.

அப்போது, தனேசின் செல்போனை காண வில்லை. அவரது செல்போனை தேடும் போது, எங்களை பார்த்து செல்போனை திருடி மறைத்து வைத்துள்ளீர்கள் என கூறி ஆபாசமாக திட்டினார்.
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நாங்கள் தனேசை கீழே தள்ளி விட்டு, விட்டு அங்கிருந்த கல்லை தலையில் வீசி விட்டு சென்று விட்டோம். அவர் இறந்து விட்டார் என்பது மறுநாள் தான் எங்களுக்கு தெரிய வந்தது. நாங்கள் தப்பி செல்ல திட்டமிட்டோம். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர் என கூறி உள்ளனர்.

The post கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம் appeared first on Dinakaran.

Related Stories: