விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சி நவீன விளையாட்டு அரங்கம் தற்போது வருகிறது. அந்த பகுதியில் நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில், இறந்தவர் அதே விளையாட்டு மைதானத்தில் பொறியாளராக வேலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டுநாயக்கன்பள்ளியைச் சேர்ந்த முகேஷ் (53) என்பது தெரியவந்தது. முகேஷின் இடது கண் ,முன் பக்க உதடு மற்றும் முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது. மேலும் கான்கிரீட் கல்லை தலையில் போட்டு முகேஷ் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என ஆர்கே நகர் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனை முகேஷ் தட்டிக் கேட்டபோது இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: