சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல்

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து கேரளாவிற்கு 45 மாடுகளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், லாரிகளை பறிமுதல் செய்து, மாடுகளை மீட்டு கோ சாலையில் ஒப்படைத்தனர். சென்னை அய்யப்பன்தாங்கல் சாய்ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (23) விலங்குகள் நல ஆர்வலரான இவர் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரண்டு லாரிகளில் மாடுகளை அடைத்து கடத்திச் செல்வது குறித்து விக்னேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று லாரிகளை மடக்கி பிடித்தனர். மேலும், லாரி டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில், சென்னையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த நவாஸ்கான் (28), அப்பாஸ் மந்திரி (51), உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (31), மாரியப்பன் (52) மற்றும் ராம் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட 44 மாடுகளையும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள தேவந்தவாக்கம் பகுதியில் உள்ள கோகுலகிருஷ்ணா கோ சாலையில் ஒப்படைத்தனர்.

The post சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: