வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி

தொண்டாமுத்தூர்: கோவை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரிமலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் சென்று சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 23ம் தேதி இரவு கிரிமலை ஏறிய சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி ரோடு பாரதி நகரை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் நேற்று முன்தினம் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் நேற்று முன்தினம் மலை ஏறிய ஐதராபாத் சென்ட்ரல் பகுதி துவாரா காலனியை சேர்ந்த சுப்பராவ் (40) என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து விழுந்து இறந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தேனி மாவட்டம் சி.பாளக்கோட்டை பட்டி தெருவை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பாண்டியன் (40) என்பவர் தனது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார். 3வது மலையை தாண்டி வழுக்குப்பாறை அருகே சென்றபோது, பாண்டியன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனடியாக அவரை அவரது நண்பர்கள் மீட்டு பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் மலை அடிவாரம் கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் தயாராக இருந்த டாக்டர் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

The post வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Related Stories: