வெயிலுக்கு இங்கே வேலை இல்லை… பனியில் நனைகிறது ‘குட்டி காஷ்மீர்’: குளிருடன் வரவேற்கிறது கொடைக்கானல் ‘கூக்கால்’

கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. அதேசமயம், தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் அங்கு குளுமையான வானிலை நிலவி வருகிறது. மூணாறு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தற்போது பிற்பகலுக்கு மேல் பரவலாக மழை பெய்வதால் பகல் நேரங்களில் சுற்றுலாத் தலங்களில் மேகமூட்டம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், மூணாறுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்கள், இந்த மேகக்கூட்டங்கள் தழுவிச்செல்லும் ஆனந்த பரவசத்தில் திளைக்கின்றனர். மூணாறின் குளிர், தொட்டுத் தழுவும் மேகங்கள், களைத்து வந்த உடலுக்கும், மனதுக்கும் பெரும் ஆறுதலாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மூணாறின் இயற்கை அழகை ரசிக்க தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள், மேகக் கூட்டங்கள் திரண்டு காணப்படும் இரண்டாம் மைல் வியூ பாயின்ட், கேப் ரோடு, லாக்காடு வியூ பாயின்ட், தேவிகுளம் சிக்னல் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ேநரத்தை உற்சாகமாக செலவிடுகின்றனர்.

‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் செல்வதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இ-பாஸ் நடைமுறை கடந்த 7ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் வார விடுமுறையான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தூண் பாறை, கூக்கால் ஏரி, குணா குகை, மோயர் பாய்ன்ட் உள்ளிட்ட பகுதிகளை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக, மேல்மலை பகுதியில் குளிரான சூழலுடன் கவரும் கூக்கால் ஏரி பகுதிக்கு அதிகளவில் திரண்டு இயற்கை அழகை ரசித்தனர்.

கொடைக்கானலில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இரவிலும் பகலிலும் இதமான சூழல் நிலவி வருகிறது. வாகன நெரிசல் ஏற்படாதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள சிறு நிறுவனங்களில் வியாபாரம் குறைவாகவே நடந்தது என வியாபாரிகள் தெரிவித்
தனர்.

The post வெயிலுக்கு இங்கே வேலை இல்லை… பனியில் நனைகிறது ‘குட்டி காஷ்மீர்’: குளிருடன் வரவேற்கிறது கொடைக்கானல் ‘கூக்கால்’ appeared first on Dinakaran.

Related Stories: